28 July, 2015

அப்துல் கலாம் - கண்ணீர் அஞ்சலி





அக்னிச் சிறகு
      ஓய்ந்து விட்டதா?

அதன் சுவாசம்
      நின்று விட்டதா?

கடமையைச் செய்வதே
      தன் கடமை என்ற
      பாரதத் தாயின்
      தலைமகன்
      தன் மூச்சை நிறுத்திக்   
      கொண்டாரா?

ஏவுகணைத் தந்தை
      ஓய்வெடுத்துக் கொண்டாரா?

கனவு மெய்ப்பட வாழ்ந்தவர்
      கனவாகிப் போனாரா?

வல்லரசு தேசம் காண
      கனவு காணச் செய்தவர்
      காணாமலேயே கண்ணுறங்கி விட்டாரா?

மதம் கடந்த மனித நேயன்
      உயிர் கடந்து போனாரா?

தமிழன் தலைதனைத்
      தரணியில் நிமிர செய்த
      தலைமகன்
      தலை சாய்ந்து போனாரா?

கேள்விகளைக் கேள்செவி கொண்டு
      கேட்டு பதிலுரைத்த
      வேள்வித் தீ அணைந்து போனதா?


எல்லா கேள்விகளுக்கும்
      ‘இல்லை’ எனும் பதிலை
      யாரேனும் சொல்லுங்கள்

கனவென விழித்தெழுந்து
      ஓடிப் போய்
      அவர் கை குலுக்கி வந்திடுவேன்.

எதனையோ கனவுகள்
      மாணவர் நெஞ்சங்களில்

எத்தனையோ கேள்விகள்
      எல்லோர் மனங்களிலும்

விடை கிடைக்க காத்திருக்க

      சொல்லாமல் கொள்ளாமல்

விடை பெற்று சென்றதென்ன
      திருமகனே


யதார்த்த மனிதனே
      துவளும் நெஞ்சங்களுக்கு
      தூண்டா விளக்கே

கனவின் கருப் பொருளை
      மெய்ப்பட உரைத்த மேதையே

ஆழிசூழ் உலகை
      அன்புடன் நேசித்தாய்

வாழும் பூமி
      வளம் காண யோசித்தாய்

அதனால்தான்
      உமது இறுதி மூச்சிலும்
      மாணவர்கள் மத்தியில்
      புவி பற்றி வாசித்தாய்


ஆனால் யோசித்துப் பார்க்காமல்
      கால தேவன் உன்னை
      யாசித்து கொண்டு சென்றான்


அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன்
      அப்துல் கலாமே

நான் யதார்த்தத்தை உணருகின்றேன்
      உங்கள் பாதத்தில் தலைவைத்து
      கண்ணீர் பூக்களைச் சொரிகின்றேன்

வேறென்ன செய்ய முடியும்

      விம்மி அழுவதைத் தவிர.

21 February, 2015

உலகத் தாய் மொழி தினம் - தாய் மொழி என்பது என்ன?



            இன்று (21.02.2015) உலகத் தாய் மொழி தினம். இது பற்றியப் பதிவுகள் ஏதேனும் உள்ளனவா என்று வலை திரட்டிகளில் (தமிழ்மணம், தேன் கூடு) தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. சரி நாமே அது பற்றி ஒரு பதிவு போடுவோம் என்று முடிவிற்கு வந்தேன்.

            தாய் மொழி என்பது என்ன? என்பதில் தொடங்குவோம். ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையினைத் தாயிடமிருந்தே பெறுகிறது. அதுஅம்மாஎன்பதாகத்தான் இருக்கும். அம்மா என்பது தமிழ் மொழியாக இருந்தாலும் உலகில் பெரும்பாலான மொழிகள் அனைத்திலும் அம்மா என்பதும்எனும் ஓசையின் தொடர்புடனேயே இருக்கிறது. வேறொரு வலைப்பதிவிற்காக அண்டம் பற்றிய செய்திகளைத் தொகுத்தபோது, அண்டம் என்பது ஓசை இல்லாதது என முன்பு கூறியிருந்த அறிவியலாளர்கள், தற்போது, அண்டமானதும்எனும் மெல்லிய ஓசையுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனவே தாயிற்கும் அண்டத்திற்கும் படைப்பில் தொடர்புண்டு எனக் கொள்வோம்.

      ஒரு மனிதன் எத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்தாலும், அவனது சிந்தனை என்பது எப்போதும் அவனது தாய்மொழியில்தான் இருக்கும். அதாவது அவன் எந்த மொழியுடன் வளர்ந்து வருகின்றானோ அந்த மொழியில்தான் அவன் சிந்தனையின் செயல்பாடு இருக்கும். அதாவது, பிறந்த மொழியைக்காட்டிலும் அவன் பேசி வளர்ந்த மொழிதான் அவனுக்குச் சிந்தனை மொழியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு தமிழ் பேசும் தாய்க்குப் பிறந்த குழந்தையின் தாய் மொழி எப்பொழுதும் தமிழாகத்தான் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஏனெனில், அந்தக் குழந்தை பிறந்த உடனேயே அல்லது அதற்கு புரிந்துகொள்ளும் காலம் வருவதற்குள்ளாகவே, அது வேறொரு மொழி பேசுபவரிடம் வளரத் தொடங்குமானால், அது நிச்சயம் தமிழை மறந்து போவதுடன், தமிழ் தன் தாய்மொழி எனும் உணர்வே இல்லாமல் வாழத் தலைப்படும். அப்போது அதன் சிந்தனை மொழி என்பது அது எங்கு வாழத் தலைப்பட்டதோ அதுவாகத்தான் இருக்கும்.
           
            இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தாயின் மொழியும் சிந்தனை மொழியும் ஒன்றா? பல்வேறு சூழல்களில் அது நிச்சயம் வேறு வேறாக இருக்கலாம். அப்படி எனில் தாய்மொழிக்குச் சிறப்பா அல்லது சிந்தனை மொழிக்குச் சிறப்பா?
           
            தாய்மொழியே சிந்தனை மொழியாக இருக்கும்போது அதற்கு சிறப்பு மிக அதிகம். தாயின் மொழி வேறாக இருந்து ஒருவருக்கு சிந்தனை மொழி வேறாக இருக்குமானால், அந்த சிந்தனை மொழிதான் அவருக்குத் தாய் (வளர்ப்புத்தாய்) மொழி எனலாம். அதனால்தான் தாய்மொழிக் கல்வி வேண்டும் என்கிறோம். [இது பற்றி ஒரு விரிவான பதிவினைப் பின்னர் பதிவிடுகிறேன்].
           
            உலகத் தாய்மொழித் தினத்தில் நம் தாய் மொழியை வணங்குவதோடு, உலகின் அனைத்து தாய் மொழியாளருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.