இந்த பிரபஞ்சம் அகண்டு விரிந்த அளவிலா முடியாத
அற்புதம். இதில் மீச்சிறு துளிதான் இந்த பூமி. இதில் மனித இனம் தோன்றியது சுமார் பத்து
இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது அறிவியlலாளர்கள் கருத்து. [ ஆனால் 1.4 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின்
தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக
– தமிழ் விக்கி இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது]. இதில் தமிழ் இனம் எப்போது தோன்றியது
என்பதில் பல்வேறு கருத்துக்கள் இருப்பினும், தமிழ் இனம் மிகத் தொன்மையானது என்பதில்
கருத்துவேறுபாடு எவர்க்கும் இல்லை.
உலகில் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது.
எந்த மொழியும் ஒலி வடிவமும் வரிவடிவமும் சிறப்புறக் கட்டமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே
அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டு நீடு வாழ முடியும். தமிழின் “தொல்” காப்பியம் எது
என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் “தொல்” இலக்கண நூல் என்று தொல்காப்பியத்தைக் குறிப்பிடுகிறோம்.
வாழ்வின் சூழலுக்கு ஏற்ப அதனை நெறிப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அதுபோல்,
இலக்கியம் கண்டபின்புதான் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்கியம் கண்டபின்
இலக்கணம் கண்டது தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் செம்மொழியாக
இருந்திருக்கிறது.
ஆனால் அன்று இருந்த தமிழ், அது ஒலி வடிவமாக இருக்கட்டும்
அல்லது வரி வடிவமாக இருக்கட்டும், காலந்தோறும் மாற்றம் அடைந்துகொண்டேதான் இருக்கிறது.
அன்றைய இலக்கியங்களில் பயின்று வந்துள்ள சொற்கள் ஒலி வடிவமாக பேச்சு மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட
சொற்களாகத்தான் இருந்திருக்க முடியும். அவை இலக்கண வரம்பிற்கு உட்பட்டு செய்யுட்களில்
அளபெடுத்தோ, குன்றியோ அல்லது புணர்ந்தோ சிறு மாற்றம் அடைந்திருக்கலாமேயன்றி, அவைதான்
பேச்சு வழக்கில் இருந்திருக்க முடியும். காலந்தோரும் ஏற்பட்ட மாற்றங்களினால் அச் சொற்கள்
மாற்றம் அடைந்திருக்க வேண்டும், அல்லது விலக்கியிருக்க வேண்டும் அல்லது புதிய சொற்கள்
படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவேதான் எழுத்துக்களும் காலந்தோறும் மாற்றம் அடைந்திருக்கின்றன.
பொதுவுடைமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் வாக்கியம்
– “மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்தும் மாறக்கூடியது”. எனும் புகழ் பெற்ற வாக்கியமாகும்.
எனவே காலந்தோறும் “மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை”.
இதைத்தான் பவனந்தி முனிவரும் தமது நன்னூலில்
–
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே'
தொல்காப்பியர்
தமிழ் எழுத்துக்களை வகைப்படுத்தும்போது –
முதலெழுத்துக்கள் – உயிர் (12) + மெய் (18)
= 30 என்றும்,
சார்பெழுத்துக்கள் – ஆய்தம், குற்றியலிகரம்,
குற்றியலுகரம் = 3 என்றும், வகைப்படுத்துகிறார். மெய்யெழுத்துக்கள் உயிரொடு இணைந்து,
புள்ளி நீங்கி அகர ஒலி பெறுதலும், ஏனைய உயிரெழுத்துக்களுடன் இணையும்போது, கோடு, சுழி
முதலியனப் பெற்று அவற்றின் ஒலியினை இணைந்து பெறுவதாகவும் உரைக்கிறார். எனவே, உயிர்மெய்
எழுத்துக்கள் 12 x 18 = 216.
நான் தமிழை மெத்தப்படித்தவன் இல்லையென்றாலும்,
எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில், உயிர்மெய் எழுத்திற்கு வரிவடிவம் உரைக்கப்படும்
அதே வேளையில், அதற்கு மூலமான உயிர் எழுத்திற்கும் மெய்யெழுத்திற்கும் வரிவடிவம் உரைக்கப்படவில்லை. சார்பெழுத்து எனப்படும் எழுத்து வகைகளில், ஃ ற்குமட்டும்
வரிவடிவம் உரைக்கப்படும் அதே வேளையில் பிற சார்பெழுத்தான குற்றியலிகரம், குற்றியலுகரத்திற்கு
வரிவடிவம் உரைக்கப்படவில்லை. ஏன் எனில், மேற்சொன்ன உயிர் மற்றும் மெய் எழுத்துக்களுக்கு
வரிவடிவம் என்பது அப்போது வழக்கத்தில் உள்ளதை அப்படியே எடுத்தாள்வதாக இருந்திருக்கலாம்.
அவ்வாறெனில், குற்றியலிகரத்திற்கும், குற்றியலுகரத்திற்கும் அக்காலத்தில் தனிக்குறியீடு
இருந்திருக்க வேண்டும் என்பது தின்னம். அவை காலப்போக்கில் விடுபட்டுப்போயிருக்கலாம்
அல்லது விடுவிக்கப்பட்டிருக்கலாம். தொல்காப்பியரின்
கருத்துப்படி, மாத்திரை என்பது இரண்டிற்கு மிகக்கூடாது. ஆனால் கால் மாத்திரை அளவில்
கூட எழுத்துக்கள் உச்சரிக்கப்படவேண்டும் எனும்போது அத்தகைய வேறுபாட்டினை எளிதில் உணர்த்த,
எழுத்துக்களின் வரிவடிவங்களில் சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அவை காலப்போக்கில்
வழக்கொழிந்து போயிருக்கலாம். காலந்தோரும் தமிழின் வரிவடிவம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.
தமிழ் நெடுங்கணக்கானது, எழுத்துக்களை, பின்வருமாறு
வகைப்படுத்துகிறது:-
முதலெழுத்து,
சார்பெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம்,
உயிர்மெய் எழுத்துகள், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம்,
மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், வல்லினம், மெல்லினம், இடையினம், சுட்டெழுத்து,
வினா எழுத்து, போலி எழுத்து என்பன.
இவற்றில் அளபெடைகள் – மாத்திரை நீண்டும், குறுக்கங்கள்
– மாத்திரைக் குறைந்தும் ஒலிக்கப்படவேண்டும் என்பதால், அவற்றிற்கும் அக்குறிப்பிட்ட
எழுத்துக்களின் வரிவடிவங்களில் சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம்.
![]() |
மாமுனிவர் |
மேற்புள்ளியிடப்பட்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்
என்பது தொல்காப்பியம் காலந்தொட்டே இருந்துவந்தாலும், இடையில், மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றே
எழுதப்பட்டுவந்துள்ளன. வீரமாமுனிவர் காலத்தில்தான் மீண்டும் மெய்யெழுத்துக்களுக்கு
மேல் புள்ளிவைத்தல் தொடங்கியதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. பேச்சு மொழியிலிருந்து
சற்று வேறுபட்டு எழுத்துநடை இருந்தாலும், அதனை உரைநடை வடிவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தவர்
வீரமாமுனிவர்தான். நிறுத்தற்குறிகளை வழக்கில் கொண்டுவந்தவரும் அவர்தான். “எ” எனும்
வரிவடிவம் “எ” மற்றும் “ஏ” இரண்டிற்கும் பொதுவாக இருந்ததை, கீழே நீட்டி “ஏ” வையும்,
“ஒ” எனும் வரிவடிவம் “ஒ” மற்றும் “ஓ” இரண்டிற்கும் பொதுவாக இருந்ததை, கீழே சுழித்து
“ஓ” வையும், வழக்கில் கொண்டுவந்தவரும் அவர்தான்.
பின்னர், தந்தைப் பெரியார் அவர்களின் எழுத்துச்
சீர்திருத்தம், முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், கீழ்வரும் வடிவங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு
இன்று வழக்கில் உள்ளன.
![]() |
பெரியாரின் வரிவடிவம் |
எனவே காலந்தோரும், எழுத்துக்கள் ஒலியிலும், வரியிலும்
மாற்றம் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன.
“சரி, என்ன சொல்ல விழைகிறீர்கள்?” என்று கேட்பது
காதில் விழுகிறது.
அடுத்தும்
.. கால வகையினானே-2…
No comments:
Post a Comment