15 January, 2019
21 January, 2018
ஆண்டாள் தான் காரணமா?
கவியரசு கண்ணதாசன் இருந்த காலத்திலேயே தன்னைக் கவிப்பேரரசாக அறிவிக்கச் செய்த மாபெரும்(?) கவிஞரும் ஆங்கிலக் கலப்பே இல்லாமல் திரைப்படப் பாடல்கள் எழுதிவரும் தமிழ்த்தாயின் தவப்புதல்வருமான(?) வைரமுத்து, ஆண்டாளைப் பற்றி கூறிய கருத்து இன்று விவாதப் பொருளாகவும், போராட்டங்களாகவும் நடைபெற்று வருகிறது.
வைரமுத்துவை எதிர்த்து நடந்து வரும் இந்தப் போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆண்டாள் மட்டும்தானா?
இந்தியா பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துவரும் மதச் சார்பற்ற நாடு. எவரும் எந்த மதத்தினையும் சார்ந்து வாழலாம். எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. இங்குதான் சிக்கல் எழுகிறது.
இருக்கும் பேச்சுரிமை என்பது பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். எந்த மதத்தினையும் இகழ்தல் என்பது இல்லாமல் இருக்க வேண்டும். எந்த கடவுள் நம்பிக்கையையும் தூற்றுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட மதம் மட்டும் பொதுவெளியில் பகுத்தறிவு எனும் பெயரில் காயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்து வருகிறது. காயப்படுத்துபவர்கள், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் பிற மதங்களைப் பார்ப்பதில்லை. பார்த்தால் என்ன பின் விளைவுகள் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் இவர்கள் காயப்படுத்தும் மதம் பெரும்பான்மையினருக்கு உடையதாக இருந்தாலும், தைரியமாக காயப்படுத்துவார்கள், அதே வேளையில் மற்ற மதத்தினருடன் தோளோடு இணைந்து ‘பகுத்தறிவு” பேசுவார்கள். பகுத்தறிவு என்றால் பொதுவில் வைக்க வேண்டும், ஆனால் இவர்கள் இதனை பெரும்பான்மை உள்ள மதத்தின் மீது மட்டுமே வைக்க, வைக்க அதன் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு ‘இவர்களின் மீது கோபம் எனும் அழுத்தம் அழுந்திக் கொண்டே இருந்து வருகிறது’. கட்சி, ஆட்சி, படைபலம், என பின்விளைவுகளைக் கண்டு எதிர்க்க திறனற்று இருப்பவர்கள், வைரமுத்து போன்ற ஆட்கள் மாட்டும்போது பொங்கி எழுந்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல இனிமேல் யாரும் இதுபோல் தேவையற்று எங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையில் தலையிடாதீர்கள் எனும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இதை ஒலிக்கிறார்கள்.
சரி, வைரமுத்துவை எதிர்த்தால் மட்டும் பிரச்சனை வராதா என்றால் நிச்சயம் வராது என்ற நம்பிக்கைதான். ஏனென்றால், வைரமுத்துவிற்கு அவர் சார்ந்திருக்கும் கட்சியிலும் சரி, திரை உலகத்திலும் சரி அவ்வளவு நல்ல பெயர். அவ்வளவு பேர் அவருக்காக போராட தயாராக இருக்கிறார்கள்.
ஆக, ஆண்டாள் இன்று ஒரு கருவி, அவ்வளவுதான்.
24 September, 2017
22 January, 2017
நாங்கள் நடத்திய போராட்டம்:
நாங்கள்
நடத்திய போராட்டம்:
அது நடந்தது 2006. புத்தாண்டின் தொடக்கத்தில்
புதுச்சேரி அரசு அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆம், அமைச்சக ஊழியர்கள் அனைவரும்
சட்டசபை எதிரில் உள்ள பூங்காவில் ஒன்று கூடி மூன்று மாதங்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டம்.
கொஞ்சம் பின்னோக்கி போவோம்.
புதுச்சேரியில் உள்ள அமைச்சக ஊழியர்கள் பல்லாண்டுகாலமாக
வஞ்சிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவது இரண்டாவது ஊதியக் குழு வரையில் நல்ல
அடிப்படை ஊதியம் வாங்கி வந்தவர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள்
ஆகிய இவர்களைக் காட்டிலும் உயர் அடிப்படை ஊதியம் பெற்று வந்தவர்கள், பின்னர் மிகவும்
வஞ்சிக்கப்பட்டு, தொடர்ந்து வந்த ஊதியக்குழுவில் புறக்கணிக்கப்பட்டார்கள். அது இன்றுவரையில்
தொடர்கிறது என்பது இருக்கட்டும், 2006-க்கு வருவோம். அன்றைய தேதியில்(2006), இள நிலை
எழுத்தர்களின் ஊதியமானது 950 அடிப்படை ஊதியமாக இருக்க, எடுத்துக் காட்டாக - இவர்களைவிட
முன்பு குறைவாக வாங்கிவந்த ஆசிரியர்கள், செவிலியர்களின் அடிப்படை ஊதியமானது, 4000,
5000 என உயர்ந்திருந்தது. இந்தச் சூழலில் புதுவை அரசனாது, ஒரு நபர்க்குழு என ஒன்றை
அறிவித்து, பல பதவிகளுக்கு உயர் அடிப்படை ஊதியத்தை அமைத்து கொடுத்தது. ஆனால் அமைச்சக
ஊழியர்கள் வைத்த கோரிக்கையினை தொடர்ந்து புறக்கனித்து வந்தது. அப்போது புதுவையில் இயங்கி
வந்த மூன்று பெரிய ஊழியர் சங்கங்கள், திடீரென விழித்துக் கொண்டு, அமைச்சக ஊழியர்களை
ஓரணியில் திரட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கோரிக்கைகளைப் பார்த்து வியந்து போய், புதுவை மாநிலத்திலேயே முதல் முறையாக, அனைத்து
அமைச்சக ஊழியர்களும் ஒன்று திரண்டு ஊழியர் சங்கங்களின் பின்னால் அணிவகுத்து நின்றோம்.
எங்கள் கனவுகளில் மிகை மதிப்பு அடிப்படை ஊதியம் கிடைத்துவிட்டதாக புல்லரித்து கிடந்தோம்.
ஆனால் நடந்தது வேறு.
மூன்று ஊழியர் சங்கங்கள் ஒன்று கூடி நடத்திய குழுவானது,
“தாழி உடைந்த கதையாக” போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்பு “வழுக்கல்” பேச்சு நடத்த
தொடங்கியது. அதாவது, “அரசு நமது கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று சொல்லிவிட்டது, எனவே
நாம் போராட்டத்தினைக் கலைத்து விடுவோம்” எனக் கூறியது. இதுவரையில், போராட்டம் என்றால்
என்னவென்றே தெரியாத, எந்த சங்க அமைப்பிலும் இல்லாத எங்களுக்கு, இவர்களின் பதில் எரிச்சலையும்,
கோபத்தினையும் ஏற்படுத்தியது.
நான் அன்றிரவு போராட்ட வாசகங்கள் கொண்ட,
எழுச்சி மிகு நீண்டதொரு கவிதை வடிவிலான வாக்கியங்களை
உருவாக்கினேன். மறுநாள் காலை, மூன்று ஊழியர்சங்கங்களும், ஒன்று கூடி போராட்டத்தினை
விலக்கிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுப்பது போல் சற்று தொலைவில் தனியாக நாடகம்
நடத்திக் கொண்டிருந்தபோது, நான் அங்கு கூடியிருந்த
என் சக அமைச்சக ஊழியர்கள் மத்தியில், நான் எழுதிய வாக்கியங்களை வாசிக்க ஆரம்பிக்க,
ஒத்தக் கருத்துடைய அனைத்து ஊழியர்களும் ஒன்று கூடி ஆதரித்து, கோரிக்கை நிறைவேறாத நிலையில்
போராட்டத்தினை தொடர வேண்டும் என்று வெகுண்டெழுந்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத, அந்த மூன்று
ஊழியர் சங்கங்களும், போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, வெளியேறிவிட்டனர்.
நாங்கள் தலைமையில் இல்லாமல், வழி நடத்துவோர்
இல்லாமல் தனித்து விடப்பட்டோம். அதைத்தான் அரசும் அவர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் “சில வேடிக்கை மனிதரைப்போல் வீழ்வோம்
என நினைத்தாயோ” என நாங்கள் ஒன்று கூடி, ஒரு குழு அமைத்து, போராட்டத்தினை தொடர்ந்து
நடத்துவது எனத் தீர்மானித்தோம்.
முதல்வர், துனைநிலை ஆளுனர், தில்லியில் உள்துறை
அமைச்சகம் என அனைத்து நிலைகளிலும் பேச்சு வார்த்தை நடத்தி, ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு
போராட்டத்தினை நடத்தினோம்.
இதில் குறிப்படத்தக்க செய்தி என்னவென்றால்,
எங்களில் யாருக்கும் சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் முன் அனுபவமே கிடையாது.
எந்த சங்கத்திலும் உறுப்பினர்களும் கிடையாது. ஆனாலும் போராட்டம் ஒரு கட்டு கோப்பாக,
எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவே தொடர்ந்தது. எங்கள் முகங்கள், ஊடகங்களில் தெரிய
ஆரம்பித்தது.
போராட்டத்தின் முடிவானது, அடிப்படை ஊதியக்
கட்டமைப்பு என்பதிலிருந்து விலகி, மத்தியில் உள்ளது போல் பதவிக் கட்டமைப்பு எனும் நிலைக்கு
மாற்றம் அடைந்து வெற்றி பெற்றோம். அதுவரையில், இள நிலை எழுத்தராக பணியில் சேரும் ஒருவர்,
பெரும்பாலும் முது நிலை எழுத்தராக ஓய்வு பெறும் நிலைதான் இருந்தது. அதனை மாற்றி, எட்டு,
பதினைந்து ஆண்டுகளில் அடுத்தக்கட்ட பதவி உயர்வு கிடைக்கும் வகையில், பதவிகளை மறுசீரமைப்பு
செய்து, வெற்றியடைந்தோம்.
இந்த
போராட்டத்தில், எங்களுக்கு உதவ வந்த எந்த அரசியல் கட்சியினரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை,
வேறு எந்த அமைப்புகளையும் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டுகோப்பான நிலையில், எங்களிடம் இருந்த
நியாமான நம்பிக்கைக் கலந்த ஒற்றுமையே எங்களை வெற்றியடையச் செய்தது.
நாங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றபோது,
ஒரு முது நிலை அமைப்பாளர் கூறிய கருத்து இதுதான் –
“போராட்டத்திற்கு
எவ்வளவு பேரை ஆதரவுக்குக் களத்தில் கொண்டுவருகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
முக்கியம் அவர்களுக்கு சிறு காயமும் (பாதிப்பும்) இல்லாமல், போராட்டத்தில் இருந்து
வெற்றியுடன் வெளியேற்ற வைப்பதும் முக்கியம்”
இதுதான் சத்தியமான உண்மை. இது எந்த காலத்திற்கும்,
எந்த பொதுவான எழுச்சி மிகு போராட்டத்திற்கும், பொருந்தக் கூடியது.
இது
தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் பொருந்தும்.
[அது சரி, உங்கள் போராட்டக் குழு இப்போது
என்னாயிற்று எனக் கேட்கிறீர்களா? அது தற்போது இன்னொமொரு “சங்கமாக” வடிவம் மாறிவிட்டது.
என்னைப் பொருத்தவரையில், தவறான, நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்களின்
நாக்கில் தேன் தடவக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால், அச்சங்கத்தினை விட்டு வெளியில்
வந்து, நீண்ட நெடு ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்ட சபை எதிரில் உள்ள பூங்கா இப்போது பூட்டு
போடப்பட்டு, எந்த போராட்டத்திற்கும் அங்கு அனுமதி கிடையாது].
06 December, 2016
கண்ணுறங்கு மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு
மகளே கண்ணுறங்கு
கால
மகள் மடிமீது கண்ணுறங்கு
விண்ணுலகம்
செல்வதற்கு கண்ணுறங்கு
விளையாடும்
அலையோரம் கண்ணுறங்கு
இன்னுமொரு
பெண் இதுபோல் பூமியிலே
இனி
பிறக்கப் போவதில்லை கண்ணுறங்கு
எண்ணமெல்லாம்
தமிழ் மக்கள் என்றவளே
எழிலாகத்
துயில் கொண்டு கண்ணுறங்கு
வற்றியதோர்
காவிரியின் கரையெல்லாம்
வளமாக்க
வந்தவளே கண்ணுறங்கு
கட்டியதோர்
முல்லையணை நீர் கிடைக்க
களம்
புகுந்து வென்றவளே கண்ணுறங்கு
ஆறாது
துயர்கொண்டு அழுகின்ற மக்களெல்லாம்
மாறாதா
காதலினால் மனமுருகி வேண்டுவதைக்
கேளாத
செவிகொண்டு கண்மூடி கிடப்பவளே
மீளாத
துயில் இதுதான் கண்ணுறங்கு கண்ணுறங்கு
பற்றியதோர்
கையின்றி தவிக்கின்ற குழந்தைகள்போல்
திக்கறியா
மக்களுக்கு திசைகாட்ட வேண்டுமிங்கே
பெற்றெடுக்கா
பிள்ளைகளைக் கொண்டவளே பெருமகளே
பிறப்பெடுத்து
மீண்டும் வர கண்ணுறங்கு கண்ணுறங்கு
25 November, 2016
மூன்றாவதாக தொலைந்து போனவன்
புதுச்சேரியில்
உள்ள மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லூரியில், வணிகவியல் பட்டயக் கல்வி 1978-79 தொகுப்பில்
பயின்ற நாங்கள் மொத்தம் 30 பேர். முப்பது பேரில் முதலில் தொலைந்து போனவன் சடகோப இராமானுஜன்.
இருபத்தைந்து வயதிற்குள் தன்னைத்தானே தொலைத்துக் கொண்டான். அடுத்து, ஆறேழு ஆண்டுகளுக்கு
முன்பு தொலைந்து போனவன், பச்சையப்பன். அவனைத் தொலைத்தது தொடர் குடி எனும் மது. முதலாமவன்
தொலைந்தபோது, எங்களுக்கு வருத்தம் இருந்தது. இரண்டாமவன் தொலைந்தபோது, வருத்தமும் சற்று
வெறுப்பும் இருந்தது. ஆனால் நேற்று (24.11.16) அதிகாலை மூன்றாவதாக ஒருவன் தொலைந்து
போனான். அவன் பெயர் சுந்தரராஜன். கோத்தாரி சுகர் & கெமிகல், அரியலூர் நிறுவனத்தில்
பணிக்குழு மேலாளர் (Personnel Manager) ஆக பணிபுரிந்து வந்தவன். விடியற்காலையில் ஏற்பட்ட
மாரடைப்பு அவனைத் தொலைத்து விட்டது. பணிக்கு தானக சென்றவன், நேற்று புதுச்சேரிக்கு
“அதுவாக” கொண்டுவரப்பட்டான். இன்று காலை அவன் உடலை எங்கள் நண்பர்கள் குழு ஒன்றுகூடி
தொலைத்து விட்டது. இனி அவன் புகைப்படங்களில் மட்டுமே சிரித்துக் கொண்டிருப்பான். எங்கள்
குழுவில் விரைவில் (22 வயதில்) திருமணம் நடந்தது அவனுக்குத்தான், அதுபோல் விரைவில்
இயற்கையாய் சென்றவனும் அவன்தான்.
முதல்
இரண்டுபேர் தொலைந்துபோனதில் ஏற்படாத வருத்தமும் பயமும் இப்போது இவன் மூன்றாவதாக தொலைந்தபோது
எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவன், நடையைக் கட்டிவிட்டான்.
எங்களுக்குள் பேசிக் கொண்டோம். வயது 50-க்கு மேல் ஆகிவிட்டாலே, நடைகட்ட வேண்டிய காலம்
என்பதை அவனின் மறைவு எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டது. எங்களின் நண்பர்களில் ஒருவன் சொன்னான்,
“நண்பா, இனிமேல் யாரிடமும், அவன் பகைவனாக இருந்தாலும் வெறுப்புக் காட்டப்போவதில்லை,
வாழ்க்கை அவ்வளவுதான், இனிமேல் மறுபடியும் பிறக்கவா போகிறோம், அப்படியே பிறந்தாலும்
யார் எங்கே பிறக்கப்போகிறோம் என்று தெரியாது”. யதார்த்தமான உண்மை. மூன்றாமவனின் பிரிவு
எங்களை வேதாந்தி ஆக்கிவிட்டது. மெல்ல கலைந்து பிரிந்தோம். அடுத்து நான்காவதாக தொலையப்போவது
யார் என்று தெரியவில்லை. கணக்கில் நானும் இருக்கலாம்.
06 August, 2016
Subscribe to:
Posts (Atom)